முகப்பு
தமிழ்நாடு

சொத்து தகராறில் கணவன் மனைவி கொலை: இளைஞர்கள் கைது

கிருஷ்ணகிரியில், சொத்து தகராறில் கணவன் மனைவியை கொலை செய்த இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:10 PM
கொலையான தம்பதி
பகிர்:


கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரியில், சொத்து தகராறில் கணவன் மனைவியை கொலை செய்த இளைஞர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி வீரப்பன் நகரை சேர்ந்தவர் புகழேந்தி (55). மர வேலை செய்து வந்தார். இவரது மனைவி பப்பி ராணி (45). புகழேந்திக்கும் அவரது அண்ணன் இளங்கோவிற்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்த நிலையில் இளங்கோவின் மகன் லோகேஷ் (18), அவரது நண்பர் சதீஷ் (18) ஆகிய இருவரும் வியாழக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் புகழேந்தி வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டனர்.  அப்போது ஆத்திரமடைந்த லோகேஷ் அவரது நண்பர் சதீஷ் ஆகிய இருவரும், புகழேந்தி, பப்பி ராணி ஆகிய இருவரையும் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தடுக்க முயன்ற எதிர் வீட்டுக்காரர் கரிகாலன்(50) சரசு (40)ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 

இரட்டைக் கொலை நடந்த வீடு.

தகவலறிந்த போலீசார் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தம்பதியை கொலைசெய்த லோகேஷ், அவரது நண்பர் சதீஷ் ஆகிய இருவரையும் கிருஷ்ணகிரி நகர போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

சொத்து தகராறில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.