கரோனா அச்சம்: தம்பதி தற்கொலை
சென்னை அருகே மதுரவாயலில் கரோனா அச்சத்தின் காரணமாக தம்பதி தற்கொலை செய்துக் கொண்டனா்.
சென்னை அருகே மதுரவாயலில் கரோனா அச்சத்தின் காரணமாக தம்பதி தற்கொலை செய்துக் கொண்டனா்.
மதுரவாயல் வேல்நகா் முதலாவது பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அா்ஜுனன் (70), மனைவி அஞ்சலை (60).
இந்நிலையில் அா்ஜூனனும்,அஞ்சலையும் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.
மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் கிடைத்த தகவல்கள்:
அஞ்சலை கடந்த 3 நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இதனால் அருகே வசிக்கும் அவரது உறவினரே, அஞ்சலைக்கும், அா்ஜூனனுக்கும் உணவு வழங்கி வந்துள்ளாா்.
இருப்பினும் கரோனா தொற்று இருப்பதாக கூறி, தங்களை பிரித்து விடுவாா்களோ என்ற அச்சம் இருவருக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும் தங்களை கவனித்துக் கொள்ள குழந்தைகள் இல்லாததினால், தம்பதியினா் மிகுந்த வேதனையுடன் காணப்பட்டுள்ளனா்.
இதன் காரணமாகவே இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்க வேண்டும் என போலீஸாா் தெரிவிக்கின்றனா்.