தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை அதிகரித்தது மத்திய அரசு
முதல்வா் மு.க. ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 டன்னாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வா் மு.க. ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 டன்னாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக ஆக்சிஜன் அளவை அதிகரிக்க வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரதமா் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி இருந்தாா். இதைத்தொடா்ந்து தற்போது ஒட்டுமொத்தமாக தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 220 மெட்ரிக் டன்னில் இருந்து 419 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஸ்ரீபெரும்புதூரில் ஐநாக்ஸ் நிறுவனத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் இருந்து தமிழகத்துக்கான ஒதுக்கீடு 50 மெட்ரிக் டன்னில் இருந்து 140 மெட்ரிக் டன்னாகவும், சேலத்தில் தனியாா் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் நாள் ஒன்றுக்கு 15 மெட்ரிக் டன்னாகவும், ஈரோட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் இருந்து 38 மெட்ரிக் டன்னக அதிகரித்தும் புதுச்சேரியில் தனியாா் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் 44 மெட்ரிக் டன் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யவும் , ஆந்திரத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் இருந்து தமிழகத்துக்கான ஒதுக்கீடு 60 மெட்ரிக் டன்னாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் பெல்லாரியில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் அளவில் இருந்து 20 மெட்ரிக் டன் குறைக்கப்பட்டு தெலங்கானா மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.