'கட்சியை சரிசெய்ய நிச்சயம் வருவேன்' - சசிகலா ஆடியோவால் பரபரப்பு
கட்சியை சரிசெய்வதற்கு நிச்சயம் வருவேன் என அதிமுக தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கட்சியை சரிசெய்வதற்கு நிச்சயம் வருவேன் என அதிமுக தொண்டர் ஒருவரிடம் சசிகலா பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. கடந்த தேர்தலிலும் அதிமுக தோல்வியைத் தழுவி ஆட்சியை இழந்தது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, தொண்டர் ஒருவரிடம் பேசிய தொலைபேசி ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில் தொண்டரிடம் சசிகலா, 'நல்லா இருக்கீங்களா' என்று கேட்கிறார். அதற்கு அவர் 'நன்றாக இருக்கிறேன். உங்கள் குரலை கேட்டதே பெரிய சந்தோஷம் அம்மா' என்கிறார்.
பின்னர் சசிகலா, 'ஒன்றும் கவலைப்படாதீங்க, கண்டிப்பாக கட்சியை சரி பண்ணிடலாம்.. கரோனா முடிந்தபின் நிச்சயம் நான் வருவேன். எல்லாரும் கவனமாக இருங்க' என்கிறார்.
பின் மற்றொரு ஆடியோவில், 'கட்சி வீணாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவர்கள் சண்டை போடுவது கஷ்டமாக இருக்கிறது. கரோனா குறைந்த பிறகு கண்டிப்பாக எல்லாரையும் சந்திக்கிறேன்' என்று தொண்டர் ஒருவரிடம் கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாக பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியே வந்த பின் அரசியல் சூழல் மாறும் என்று எதிர்பார்த்த நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் வருவேன் என்று கூறியுள்ளது அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.