கனமழை காரணமாக கடலூா் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்தாண்டு மார்ச் 24 ஆம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளிகளும் மூடப்பட்டன. தொற்று பரவலின் தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து கரோனா பொது முடக்க தளா்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நிகழ் கல்வியாண்டில் செப்.1 ஆம் தேதி முதல் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவா்களுக்காக பள்ளிகள் கடந்த செப்.1-ஆம் தேதி திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கான வகுப்புகளையும் திங்கள்கிழமை (நவ.1) தொடங்கிட தமிழக அரசு உத்தரவிட்டது. அதாவது சுமார் 19 மாதங்களுக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வந்தன.
இதையும் படிக்க | தமிழகத்தில் அக்டோபரில் மழை அளவு இயல்பை விட 29 சதவீதம் அதிகம்
இந்த நிலையில், வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் கடந்த 30-ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்தநிலையில் கனமழை காரணமாக, பள்ளிகள் திறப்பின் முதல் நாளான திங்கள், செவ்வாய்க்கிழமையும் (நவ.1,2) விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக, 4 ஆவது நாளாக இன்றும் புதன்கிழமை(நவ.3) மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ‘5 ஆண்டுகளாக இல்லாத அளவு மழை கடந்த 2 மாதங்களில் பொழிவு’
மேலும், தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையைத் தொடர்ந்து வரும் திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என தெரிகிறது.