முகப்பு
தமிழ்நாடு

நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர், இருளர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள். சாதிச் சான்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர், இருளர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பகிர்:


மாமல்லபுரம்:  பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர், இருளர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள். சாதிச் சான்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி அரசு மருத்துவமனை அருகே நரிக்குறவர்கள் மற்றும் இருளர்கள் 81 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின்படி தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. அங்கு உணவருந்தச் சென்ற பழங்குடியினத்தவரை அவமதிப்பதாகவும் அனைவருடனும் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கவில்லை என்றும் பழங்குடியின பெண் ஒருவர் அண்மையில் வேதனையுடன் தெரிவித்திருந்தார். அந்தப் பெண் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

இந்நிலையில், இதுகுறித்து அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அந்தக் கோயிலில் ஆய்வு செய்தார்.

Advertisement

பின்னர் அங்கு நடைபெற்ற அன்னதானத்தில், முறையிட்ட பழங்குடியினப் பெண் உள்ளிட்ட பொதுமக்களோடு அமர்ந்து அமைச்சர் சேகர்பாபு உணவு அருந்தினார்.

பின்னர் அவர்களுக்கு தீபாவளி திருநாளையொட்டி வேட்டி சேலைகள் வழங்கினார். பின்னர் அஸ்வினி என்ற பெண்ணை அழைத்து உங்கள் பகுதியில் எதாவது குறைகள் உள்ளதா என்பது கேட்டறிந்தார். 

அப்போது, அந்தப் பெண் எங்கள் பகுதியில் நரிக்குறவர்கள் மற்றும் இருளர்கள் என மொத்தம் 81 குடும்பங்கள் 25 ஆண்டுகளாக மெய்க்கால் புறம்போக்கில் வசித்து வருகின்றனர். அனைவருக்கும் வீட்டு மனை பட்டா, ஒரு சிலருக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதி, வருமான இருப்பிட சான்றிதழ்கள் இல்லை. அதேப்போல், சாலை வசதியோ, குடிநீர் வசதியோ மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாமல் வசித்து வருகிறோம் என பல்வேறு கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, அமைச்சர் சேகர்பாபு இது குறித்து முதல்வரிடம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக அந்த பகுதியில் போர்க்கால அடிப்படையில் அனைத்து அத்தியாவசிய பணிகளும் ஒரு வாரத்தில் செய்து முடிக்க வேண்டு என அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். 

இதைத்தொடர்ந்து, அந்தப் பகுதியில் புதிதாக சாலை அமைத்தல், மின் கம்பம், மின் விளக்கு, குடிநீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர், இருளர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள். சாதிச் சான்றுகள் உள்ளிட்ட ரூ.4.5 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காலை நேரில் சென்று வழங்கினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments