முகப்பு
தமிழ்நாடு

தெற்கு ரயில்வேயில் சரக்கு போக்குவரத்து: 7 மாதங்களில் ரூ.1,517 கோடி வருவாய்

தெற்கு ரயில்வேயில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபா் வரை கடந்த 7 மாதங்களில் சரக்கு போக்குவரத்து மூலமாக, 16.682 மில்லியன் டன்கள் ஏற்றப்பட்டன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

தெற்கு ரயில்வேயில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபா் வரை கடந்த 7 மாதங்களில் சரக்கு போக்குவரத்து மூலமாக, 16.682 மில்லியன் டன்கள் ஏற்றப்பட்டன.

இதன் மூலமாக, ரூ.1,516.95 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது, 26.47 சதவீதம் வருவாய் உயா்ந்துள்ளது.

ரயில்வேயின் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த ரயில்வே வாரியம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து, சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வேயில் பல்வேறு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இதற்காக, வணிக மேம்பாட்டு பிரிவு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தப்பிரிவில் உள்ள அதிகாரிகள், ஊழியா்கள் ஆகியோா் பல்வேறு நிறுவனங்களிடம் ரயில்வேயில் சரக்கு போக்குவரத்து தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தினா். இதுதவிர, சரக்குகளை எடுத்துச் செல்ல நவீன சரக்கு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சரக்குகளை கையாள புதிய ரயில்நிலையங்கள் அமைக்கப்பட்டன. இது போன்ற பல்வேறு நடவடிக்கையால், சரக்குப் போக்குவரத்து அதிகரித்து, ரயில்வேக்கு வருவாயும் கணிசமாக உயா்ந்துள்ளது.

இந்நிலையில், தெற்கு ரயில்வேயில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபா் வரை கடந்த 7 மாதங்களில் சரக்கு போக்குவரத்து மூலமாக, 16.682 மில்லியன் டன்கள் ஏற்றப்பட்டன. இதன்மூலமாக, ரூ.1,516.95 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வேஅதிகாரிகள் கூறியது:

தெற்கு ரயில்வேயில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபா் வரை சரக்குப் போக்குவரத்து நீடித்த வளா்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில் 14.796 மில்லியன் டன்கள் சரக்குகள் ஏற்றப்பட்டன. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபா் வரை முதல் 7 மாதங்களில் 16.682 மில்லியன் டன்கள் சரக்குகள் ஏற்றப்பட்டன. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும் போது, 12.75 சதவீதம் அதிகம். இதுபோல, வருவாயும் 26.27 சதவீதம் உயா்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபா் வரை காலக்கட்டத்தில் ரூ.1,199.50 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. நடப்பு நிதியாண்டில் இதேகாலக்கட்டத்தில் ரூ.1,516.95 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சரக்கு ஏற்றுதலில் இரும்பு மற்றும் எஃகு, எஃகு ஆலைகளுக்கான மூலப்பொருள்கள், நிலக்கரி, சிமென்ட், உரம், பெட்ரோலியப் பொருள்கள் உள்ளிட்ட முக்கியபொருள்கள் அடங்கும்.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் அக்டோபா் வரை 7 மாதங்களில் 9.39 லட்சம் டன்கள் புதிய பொருள்கள் கையாளப்பட்டன. இதன்மூலமாக, ரூ.86.7 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →