முகப்பு
தமிழ்நாடு

இன்று 50,000 இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் எட்டாவது கட்டமாக 50,000 இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ.14) நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:34 AM
பகிர்:

தமிழகத்தில் எட்டாவது கட்டமாக 50,000 இடங்களில் கரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (நவ.14) நடைபெறுகிறது. முகாம்கள் மட்டுமல்லாது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன் ஒருபகுதியாக, தமிழகத்தில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.

அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19-ஆம் தேதி 16.43 லட்சம் பேருக்கும், 26-ஆம் தேதி 25.04 லட்சம் பேருக்கும், கடந்த அக்டோபா் 3-ஆம் தேதி 17.19 லட்சம் பேருக்கும், 10-ஆம் தேதி 22.52 லட்சம் பேருக்கும், 23-ஆம் தேதி 22.33 லட்சம் பேருக்கும், 30-ஆம் தேதி 17.14 லட்சம் பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கிடையே, தொடா் மழை காரணமாக கடந்த வாரம் தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை.

இந்நிலையில், எட்டாவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 50,000 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் 2,000 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்த முகாம்களில் இரண்டாம் தவணைக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இவைதவிர மருத்துவா் தலைமையிலான குழுவினா் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடவுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →