சண்முகா நதி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி சண்முகா நதி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி சண்முகா நதி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ராயப்பன்பட்டி அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சண்முகா நதி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையால் கடந்த வாரம் நீர்த்தேக்கம் நிரம்பியது. 52.55 அடி உயரம் கொண்ட இந்த நீர்த்தேக்க அணைக்கு தொடர் நீர் வரத்து இருப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதனை அடுத்து தமிழக அரசு உத்தரவின்பேரில் மாவட்ட ஆட்சியர் க.வீ,முரளீதரன் தலைமையில் ராயப்பன்பட்டி, ஆணைமலையன்பட்டி, சின்னஓவுலாபுரம், அப்பிபட்டி, சீப்பாலக்கோட்டை,வெள்ளையம்மாள் புரம், ஓடைப்பட்டி வரையில் 1,640 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெறும் வகையில் வினாடிக்கு 14.47 கனஅடி நீர் பாசனக் கால்வாயில் திறந்து விடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், உத்தமபாளையம் கோட்டாட்சியர் கௌசல்யா, வட்டாட்சியர் அர்ஜூனன், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ராமகிருஷ்ணன், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் நிவேதா உள்பட பலரும் கலந்துகொண்டனர்.