புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் மழை சேதம் ஆய்வு செய்யப்படவில்லை, காலிப்பணியிடங்களையும் நிரப்ப இல்லை என்று அனைத்துக்கட்சி எம்.எல்.ஏக்கள் தலைமைச் செயலருடன் முறையீடு செய்தனர்.
புதுச்சேரியில் மழை வெள்ள சேத விபரங்கள் குறித்து எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தவில்லை எனக்கூறியும், சேத விபரங்களை முழுமையாக கணக்கெடுக்கவில்லை, அதிகாரிகள் களத்தில் வராமல் மெத்தனமாக உள்ளதோடு, அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களையும் நிரப்ப இல்லை என்று, புதுச்சேரி தலைமைச் செயலாளர் அஸ்வினி குமாரை, புதன்கிழமை காலை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ், பாஜக சுயேச்சை, எம்.எல்.ஏக்கள் சந்தித்து புகார் தெரிவித்து முறையிட்டனர்.
அப்போது நேரு, கல்யாணசுந்தரம் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் கூட்டாக கூறியதாவது: புதுச்சேரியில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள், 20 ஐபிஎஸ் அதிகாரிகள் இருந்தும் மழை வெள்ள பகுதிக்கு நேரில் வந்து பார்வையிடவில்லை. சேத மதிப்புகளை சரியாக கணக்கிடாமல் வெறும் ரூ. 20 கோடி சேதம் அடைந்ததாக கணக்கெடுத்துள்ளனர்.
அரசு ரூ.300 கோடி கோரியுள்ள நிலையில், எதுவுமே தெரியாமல் அதிகாரிகள் உட்கார்ந்த இடத்திலேயே பணியாற்றுகின்றனர்.
அரசுத்துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. அனைத்து துறைகளும் பாதித்துள்ளன.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைச் செயலரிடம் முறையிட்டு உள்ளோம். நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.