தமிழகம், புதுவையில் அடுத்த 5 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவ காற்று காரணமாக 09.09.2021 முதல் 13.09.2021 வரை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேசமயம் 13 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவலா 16, பந்தலூர் 8, மேல் கூடலூர் 5 செ.மீ., மழைப் பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.