சென்னை: இதனை ஏதோ ஆரம்ப வேகம் என்று நினைக்க வேண்டாம்; எப்போதும் இப்படித்தான் இருப்போம். எல்லா நாளும் இப்படித்தான் செயல்படுவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
காணொலி வாயிலாக மக்களிடம் உரையாடிய முதல்வர் மு.க. ஸ்டாலின், ஒரு மகிழ்ச்சியான செய்தியைச் சொல்வதற்காகத்தான் உங்களை நான் சந்திக்கிறேன்!
மக்களாகிய நீங்கள் வாக்களித்த காரணத்தால்தான், இந்த முதலமைச்சர் பொறுப்பில் நான் உட்கார்ந்திருக்கிறேன். நீங்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் - இன்றைக்கு நான் கோட்டையில் உட்காருவதற்கு அடித்தளமாக அமைந்தது. இவர்களுக்கு வாக்களித்தால், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள். மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்வார்கள் என்று நம்பி நீங்கள் வாக்களித்திருக்கிறீர்கள்.
நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கிற நம்பிக்கையை நாங்கள் இம்மியளவும் பிசகாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும். நீங்கள் எங்களுக்கு வாக்களித்தீர்கள். நாங்கள் உங்களுக்குக் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளைக் காப்பாற்றி இருக்கிறோம்.
அதனால்தான் உங்கள் முன்னால் தைரியமாகப் பேசுகிறேன். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், திமுக சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம். நான் அதை வெளியிட்ட போது, தலைவர் கருணாநிதி பாணியில் சொன்னதைச் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம்- என்று சொன்னேன்.
இதையும் படிக்கலாமே.. ரயில் இருக்கையைத் தேடி உணவு வர வேண்டுமா? இதோ இலவச எண்
ஆட்சிக்கு வந்து இன்றோடு 4 மாதங்கள்தான் கடந்துள்ளன. இந்த நான்கு மாதங்களுக்குள் சொன்னவற்றில் பெரும்பாலானவற்றைச் செய்து விட்டோம். 505 வாக்குறுதிகளைத் தந்தோம். அவற்றில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டோம்! என்னென்ன வாக்குறுதிகள் நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை நீங்களே பாருங்கள்!
இதையும் படிக்கலாமே.. கொடூரத்தின் உச்சம்: மனைவி தூக்கிட்டுத் தற்கொலை; விடியோ எடுத்த கணவன்
மே 7-ஆம் தேதி பதவியேற்ற சில மணி நேரத்திலேயே ஐந்து முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டேன்.
இந்த ஐந்தில் முதல் நான்குமே திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தவை. இதன் தொடர்ச்சியாக,
தமிழக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் வேறென்னென்ன?
குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த அனைத்து நபர்களுக்கும் பதினைந்து நாட்களுக்குள் ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்குதல். இத்திட்டத்தின்கீழ் 5 இலட்சத்து 49 ஆயிரத்து 505 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசுப் பணியாளரின் குடும்பத்தினருக்கு, குடும்பப் பாதுகாப்பு நிதியிலிருந்து வழங்கப்படும் உதவித் தொகை 3 இலட்சம் ரூபாயிலிருந்து 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது.
மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறுகால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டது.
அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40% ஆக உயர்வு. இப்படி, தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
சட்டசபை விவாதங்களை முழுமையாக கவனித்தவர்களுக்கு நான் சொல்வது முழு உண்மை என்பது தெரியும்!
ஆளுநர் அறிக்கையில் 51 வாக்குறுதிகளும்; எனது பதிலில் இரண்டு வாக்குறுதிகளும்; நிதிநிலை அறிக்கையில் 43 வாக்குறுதிகளும்; வேளாண் நிதி நிலை அறிக்கையில் 23 வாக்குறுதிகளும்; அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகளில் 64 வாக்குறுதிகளும்; இதர அறிவிப்புகளில் 16 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.
மொத்தம் 202 வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன என்ற மகிழ்ச்சியான செய்தியை நாட்டு மக்களுக்குத் தெரிவிப்பதில் பெருமை அடைகிறேன்! இன்னொரு முக்கியமான செய்தியை நான் சொல்ல வேண்டும். தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல நல்ல செயல்களும் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்?
பத்திரிகையாளர் மற்றும் ஊடகத்துறையினர் “முன்களப் பணியாளர்”களாக அறிவிப்பு.
அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கான சிறப்பு ஊக்கத்தொகை 5,000 ரூபாய் ஆக உயர்வு.
கரோனா தொற்றால் உயிரிழந்த அங்கீகரிக்கப்பட்ட ஊடகத்துறையினர்களுக்கான இழப்பீட்டுத் தொகை 10 இலட்சம் ரூபாயாக உயர்வு.
பாட்டுக்கொரு புலவன் பாரதியை போற்றும் வகையில் 14 அறிவிப்புகள்.
சமூகநீதியை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்கக் குழு.
இந்தியாவிலேயே முன்மாதிரித் திட்டமான ‘மக்களைத் தேடி மருத்துவம்’ தொடக்கம்.
எழுத்தாளர் கி. ராஜநாராயணனுக்கு அரசு மரியாதை, கோவில்பட்டியில் சிலை, இடைச்செவலில் அவர் படித்த பள்ளி புதுப்பிப்பு உள்ளிட்ட ஏராளமானவை.
இவை எல்லாம் நாங்கள் அறிவிக்காதது. ஆனால் செய்து கொடுக்கப்பட்டவை. சொன்னதைச் செய்தவர்கள் மட்டுமல்ல - சொல்லாததையும் செய்து கொடுத்தவர்கள் நாங்கள்!
505 வாக்குறுதிகளில் நான்கு மாதங்களுக்குள் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு, இந்தியத் துணைக்கண்டத்திலேயே தி.மு.க. அரசாகத்தான் இருக்கும்.
இதனை ஏதோ ஆரம்ப வேகம் என்று நினைக்க வேண்டாம்; எப்போதும் இப்படித்தான் இருப்போம். எல்லா நாளும் இப்படித்தான் செயல்படுவோம். இப்போது அறிவித்ததுபோல மூன்று மாதத்திற்கு ஒருமுறை நானே உங்களிடம் இதைச் சொல்வேன்.
நிறைவேற்றிய வாக்குறுதிகளை நானே உங்களுக்கு பட்டியல் போட்டுக் காண்பிப்பேன். வாக்களித்த மக்களை ஐந்து ஆண்டுகள் கழித்துத்தானே பார்க்கப் போகிறோம் என்று அலட்சியமாக இருப்பவன் இல்லை நான். என்னை இயக்கிக் கொண்டு இருப்பது மக்களாகிய நீங்களும் எனது மனசாட்சியும்தான்! நீங்கள் உத்தரவிடுங்கள்! உங்களுக்காகவே உழைக்கக் காத்திருக்கிறேன்! என்று கூறியுள்ளார்.