தூத்துக்குடி: மத்திய அரசு கொண்டு வந்த அணைத்து திட்டங்களையும் திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க நினைக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதன்கிழமை தூத்துக்குடி விமான நிலையம் வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது:
தமிழகத்தில் கொலைக் குற்றங்களை தடுப்பதற்காக காவல்துறையினர் எடுத்து வரும் நடவடிக்கைக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பல மன அழுத்தங்களால் மாணவர்கள் உயிரிழந்து வரும் நிலையில், தமிழக அரசு அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தொடர்ந்து அரசியல் செய்து வருகிறது. எனவே மாணவர்களின் உயிரிழிப்பை தடுப்பதற்கு அவர்களை குழப்பாமல், திமுக அமைதியாக இருந்தாலே போதும்.
தேர்தல் வரும் போதெல்லாம் திமுக நீட் தொடர்பாக பேசி ஆதாயம் தேடிக் கொள்கிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மாணவர்களை பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கக் கூடிய அரசு, ஏன் தடுப்பூசி எடுத்துக்கொண்ட பெரியவர்களை கோவிலுக்கு செல்ல அனுமதிக்க மறுக்கிறது. இந்த அரசு டாஸ்மாக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட கோவில்களுக்கு தரவில்லையே. எனவே, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். இந்த அரசு, எல்லா மதத்தினரையும் சமமாக நடத்தவேண்டும். அனைவருக்கும், அனைத்து நிலையிலும் சரியான முடிவை எடுக்க வேண்டும்
கரீப் கல்யாண் அன் யோஜனா, தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி மறைக்க நினைக்கிறது தமிழக அரசு. மத்திய அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களிலும் மாநில அரசு, பாரதப் பிரதமர் படத்தை கூட வெளியிடாமல் எல்லாம் மாநில அரசு செய்வதாக சொல்லிக்கொள்வது எப்படி மக்களுக்கான அரசாக இருக்க முடியும்.
இதையும் படிக்க | களியக்காவிளை காவல்துறை சோதனைச் சாவடியில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனை: கணக்கில் வராத ரூ.14,600 பறிமுதல்
கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சி அமைந்ததும் வங்கிகளில் அடமானம் வைத்துள்ள நகைகளுக்கு கடன்தள்ளுபடி கிடைக்கும். எனவே நகை அடமானம் வைக்காதவர்கள் இப்போதே வங்கியில் நகை கடன் பெற்றுக்கொள்ளுங்கள், திமுக ஆட்சி அமைந்ததும் கடன் தள்ளுபடி பெறலாம் என உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். ஆனால் முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் பேசும் போது வங்கிகளில் முறைகேடாக நகை அடமானம் வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கிறார்.
நியாயப்படி பார்த்தால், முதலில் உதயநிதி ஸ்டாலின் மீது தான் வழக்குப்பதிவு செய்யவேண்டும். இதெல்லாம் திமுக அரசியலுக்காக போடுகிற நாடகம் என்று அண்ணாமலை கூறினார்.