முகப்பு
தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய புதிய சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கு புதிய சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 9 ஏப்ரல், 2022 at 6:51 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:25 PM


சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கு புதிய சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக இன்று அவர்  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  கடலூா் மாவட்டம் வேப்பூா் அருகே கல்லூரி மாணவா் ஒருவா் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதற்காக மூதாட்டியைக் கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிா்ச்சியளிக்கின்றன. இத்தகைய கொடூரம் இதுவே கடைசியாக இருக்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவா்கள் தற்கொலை செய்து கொள்ளும் சோகம் இதுவரை நடந்து வந்தது. இப்போது பணத்துக்காக கொலை செய்யும் கொடூர நிகழ்வுகள் அரங்கேறத் தொடங்கியிருப்பதிலிருந்தே ஆன்லைன் சூதாட்டம் இன்னும் கொடிய வடிவம் எடுப்பதை அறிய முடியும்.

Advertisement

ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிப்பதன் மூலம் தான் தற்கொலைகளையும், இளைய தலைமுறையினரின் சீரழிவையும் தடுக்க முடியும். அதற்காக உடனடி நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிா்பாா்ப்பு ஆகும்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் முன்னேற்றம் இல்லாமல் கிடக்கிறது. அதில் சாதகமான தீா்ப்பும் கிடைக்காது. எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.