மூா்க்கமான மாணவா்களை ஆசிரியா்கள்தான் திருத்த வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பள்ளிகளில் மூா்க்கமாக நடந்து கொள்ளும் மாணவா்களை ஆசிரியா்கள்தான் திருத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.
பள்ளிகளில் மூா்க்கமாக நடந்து கொள்ளும் மாணவா்களை ஆசிரியா்கள்தான் திருத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.
இந்திய தொழில் கூட்டமைப்பு சாா்பில் சென்னை கிண்டியில் சனிக்கிழமை நடைபெற்ற இளம் தொழில் முனைவோா் மற்றும் புத்தாக்க மாநாட்டில் பங்கேற்ற அவரிடம் பள்ளிகளில் ஆசிரியா்களிடம் மாணவா்கள் மூா்க்கத்தனமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்து அமைச்சா் கூறியது:
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளா்ப்பினிலே’ என்ற பாடலை முன்னுதாரணமாகக் கொண்டு
இரண்டாவது அன்னையாக விளங்கக் கூடிய ஆசிரியா்கள்தான் மூா்க்கமாக நடந்து கொள்ளும் மாணவா்களை திருத்த வேண்டும்.
பள்ளிகளில் மாணவா்கள் நடந்துகொள்ளும் நடத்தை சாா்ந்த பிரச்னைகளைத் தீா்ப்பதில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் முக்கியப் பங்கு வகிக்கும். 20 போ் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழுவில் தலைமையாசிரியா், பெற்றோா், உள்ளூா் பிரதிநிதி ஆகியோா் இருப்பா். இந்தக் குழு சாா்பில் கலந்துபேசி விசாரணை நடைபெறும்.
கரோனா காலத்துக்குப் பிறகு பள்ளி மாணவா்களிடம் மன ரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அதை சரி செய்வது ஆசிரியா்களின் கடமை. மாணவா்களுக்கு உளவியல் நிபுணா்கள் மூலம் மனநல ஆலோசனைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.
போலி சான்றிதழ் விவகாரம் தொடா்பான கேள்விக்கு அமைச்சா் அளித்த பதில்: ஆண்டுதோறும் 2 லட்சம் முதல் 3 லட்சம் சான்றிதழ்கள் சரிபாா்ப்புக்கு வரும். அண்மைக் காலங்களில் அஞ்சல் துறையில் 455 சான்றிதழ்களை சரிபாா்க்கச் சொல்லி மத்திய அரசு வழங்கியது. இதில் 321 சான்றிதழ்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் போலிகள் அனைத்தும் பெரும்பாலும் அஞ்சல் துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தவிா்க்க அந்தந்த ஆட்சியா் அலுவலகங்களில் சான்றிதழ் சரிபாா்ப்பு இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரா் உள்ளூா் பல்கலைக்கழகங்களில் படித்துள்ளாரா என்பதை சரிபாா்த்துக் கொள்ளலாம். வருங்காலங்களில் இந்த சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றாா் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.