கீழையூர் ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயத்தில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
ஸ்ரீரங்கத்திற்கு இணையாக கீழ் அரங்கம் என அழைக்கப்படும் கீழையூரில் ஸ்ரீரங்கநாயிகா சமேத ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பக்தி பரவசத்துடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தொடர்ந்து பின்னைக்கிளை வாகனம், சேஷ வாகனம், கருடசேவை,அனுமந்த வாகனம், யானை வாகனம், புஷ்ப பல்லாக்கு, குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாகனங்களில் பெருமாள் ஒவ்வொரு நாளும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற திருத்தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய ரங்கநாதப் பெருமாளுக்கு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருதேரோட்டத்தினை ஊராட்சி தலைவர் ஆனந்தஜோதிபால்ராஜ் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் வலம் வந்த தேர் மீண்டும் நிலையடியை வந்தடைந்தது.
இந்நிகழ்வில் கைங்கர்ய சபா உறுப்பினர்கள் நாகை.வெங்கடேசன், எஸ்.சந்தானகிருஷ்ணன், எஸ்.கண்ணன், சி.பி.பாலாஜி மற்றும் கிராமவாசிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையும் படிக்க |தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை: வெப்பம் தணிந்தது