சேலம்: ஒவ்வொரு கட்சியிலும் கருத்து வேறுபாடுகள் இருப்பது தவிர்க்க முடியாது. அந்த வகையில் உள்கட்சி விவகாரத்தில் கருத்து வேறுபாடு இருப்பது வாடிக்கை என முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் அதிமுக சார்பில், பெண்கள் பயன்பெறும் வகையிலான இலவச தையல் பயிற்சி நிலையம் திறப்பு விழா இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பயிற்சி நிலையத்தை தொடங்கி வைத்தார்
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் பல்வேறு துறைகளில் சிறந்த நிர்வாகியாக செயல்பட்டுள்ளார் என்பதால் அவருக்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியிலும் கருத்து வேறுபாடுகள் இருப்பது தவிர்க்க முடியாது. அந்த வகையில் சில எதிர்ப்புகள் இருக்கலாம். அதை எல்லாம் கடந்து செல்லத்தான் வேண்டும் என்றார்.
தற்போது பெண்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனிடிப்படையில் அதிமுக சார்பில் மேலும் பல இடங்களில் இலவச தையல் பயிற்சி நிலையம் தொடங்கப்படும் என்றார்.
தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக, நிலவி வரும் மின்வெட்டை சரி செய்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மின் வெட்டு என்பது பொதுப்பிரச்னை. இதனால் தமிழகத்தில் விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன என்றார்.
மேலும் தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை வரும் திங்கள்கிழமை நானும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் நேரில் சென்று ஆறுதல் கூறி, அதிமுக சார்பில் நிவாரண உதவி வழங்க உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.