அக்னிபத் திட்டம் இளைஞர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதாக மத்திய மீன்வளம் மற்றும் பால்வளத் துறை இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, கடந்த 8 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள வளர்ச்சியை அனைவரும் கண்கூடாக காண முடியும். மேலும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சுதேசி கப்பலை இயக்கிவர் வ.உ. சிதம்பரனார். வ.உ.சிதம்பரனாரின் தற்சார்பு கனவை இன்று பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றிகொண்டு இருக்கிறார்.
இதையும் படிக்க- தமிழ்நாடு முழுவதும் 76 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்
75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் வஉசி-யின் 150 ஆவது பிறந்த நாள் வருவது மேலும் சிறப்பு வாய்ந்தது. பிரதமர் விடுத்த அழைப்பின்படி, வரும் 13 முதல் 15 ஆம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும். இது ஆங்கிலேயர்களின் தாக்குதலின்போது தேசிய கொடியை கீழே விழாமல் காத்த திருப்பூர் குமரனுக்கு செலுத்தும் மிகச் சிறந்த காணிக்கையாக இருக்கும்.
இளைஞர் மத்தியில் அக்னிபத் திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது, லட்சக்கணக்கான இளைஞர்கள் தாமாகவே முன்வந்து அக்னிபத் திட்டத்திற்கு பதிவு செய்து வருகின்றனர். இந்தியாவின் நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள 2047 ஆம் ஆண்டில் அப்துல் கலாம் கண்ட கனவுபடி, இந்தியா உலகிற்கே வழிகாட்டியாக திகழும் என்றார்.