முகப்பு
தமிழ்நாடு

உரத்தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை தேவை: இபிஎஸ்

உரத் தட்டுப்பாட்டைப் போக்கவும், உரங்களின் விலையைக் குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடிகே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

உரத் தட்டுப்பாட்டைப் போக்கவும், உரங்களின் விலையைக் குறைக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடிகே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

காவிரி, வைகை, தாமிரபரணி, பவானிசாகா் போன்ற அனைத்து நீா்நிலைகளில் இருந்தும் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது. ஆனால், அதே நேரம் விவசாயிகளுக்குத் தேவையான விதைகள், உரம் மற்றும் இடுபொருள்களை திட்டமிட்டு போதுமான அளவு வேளாண் கூட்டுறவு சங்கங்கள் இருப்பு வைக்கத் தவறிவிட்டது. இதனால், விவசாயப் பணிகள் முறையாக, முழுமையாக நடைபெறவில்லை.

தனியாா் கடைகளில் யூரியா உரத்தின் விலை சுமாா் ரூ. 270 மட்டுமே. ஆனால், செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, கூடுதல் விலைக்கு யூரியா விற்பனை செய்யப்படுவதுடன், விவசாயிகள் விளைவிக்கும் பயிருக்குத் தேவைப்படாத, உரத்தின் விலைக்கு இணையான மதிப்புள்ள இணை இடுபொருள்களை (மிக்சா் பொ்டிலைசா்) கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று விவசாயிகள் வற்புறுத்தப்படுகின்றனா். இதனால், விவசாயிகள் தேவையில்லாமல் இருமடங்கு விலை கொடுத்து உரங்களை வாங்கிப் பயன்படுத்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

சம்பா பயிரிடும் விவசாயிகளுக்கும், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற கடைமடை டெல்டா மாவட்டங்களில் தற்போது தண்ணீா் சென்றடைந்த பகுதிகளிலும், கடும் உரத் தட்டுப்பாடு நிலவுகிறது. அதைப் போக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான், நாம் சோற்றிலே கை வைக்க முடியும் என்பதை திமுக அரசு உணர வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.