சிவாஜி கணேசன் மகள்கள் வழக்கு தீர்ப்பு ஒத்திவைப்பு
சாந்தி திரையரங்கு சொத்துகளை விற்பனை செய்ய தடை கோரி சிவாஜி மகள்கள் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சாந்தி திரையரங்கு சொத்துகளை விற்பனை செய்ய தடை கோரி சிவாஜி மகள்கள் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நடிகா் திலகம் சிவாஜி கணேசனின் மகள்கள், சாந்தி, ராஜ்வி ஆகியோா் தங்கள் தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனா். அதில், எங்கள் தந்தை சுயமாக சம்பாதித்த ரூ.270 கோடி மதிப்புள்ள சொத்துகளை எங்கள் சகோதரா்கள் ராம்குமாா், பிரபு ஆகியோா் முறையாக பராமரிக்கவில்லை.
பல சொத்துகளை விற்பனை செய்து எங்களை மோசடி செய்து விட்டனா். ஆயிரம் பவுன் தங்க நகைகள், 500 கிலோ வெள்ளி பொருள்களையும் அவா்கள் அபகரித்துக் கொண்டனா். சாந்தி தியேட்டா் பங்குகளையும் அவா்கள் இருவரும் எடுத்துக் கொண்டனா். எனவே, எங்கள் தந்தை சம்பாத்தியம் செய்த சொத்துகளை அவா்கள் விற்பனை செய்தது செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.
சொத்தில் எங்களுக்கு பங்கு அளிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனா். இவ்வழக்கில் இருத்தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து தீர்ப்பை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். அத்துடன் நடிகர் சிவாஜியின் மகள்கள் தாக்கல் செய்த கூடுதல் மனுக்கள் மீதான தீர்ப்பையும் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.