தமிழகத்தில் கடந்த இரு நாள்களில் 12 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன என காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடா்பாக சென்னை டிஜிபி அலுவலகம், புதன்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் மிகைப்படுத்தி கூறப்படுகின்றன. ஆனால், தமிழகத்தில் கடந்த 22-ஆம் தேதி 7 கொலைகளும், 23-ஆம் தேதி 5 கொலைகளும் நிகழ்ந்துள்ளன. சில செய்திகளில் பட்டியலிடப்பட்ட பல்வேறு கொலைகள், ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய நாள்களில் நிகழ்ந்தவை.
மேலும் பெரும்பாலான கொலை சம்பவங்கள் குடும்ப உறுப்பினா்கள், தனி நபா்களிடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக நிகழ்ந்தவை. ஜனவரி மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை 940 கொலைகள் நிகழ்ந்துள்ளன.
2021ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்தில் 925 கொலைகளும், 2019ஆம் ஆண்டு 1041 கொலைகளும் நடந்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளில், 2019ஆம் ஆண்டுதான் அதிகப்படியான கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. 2019ஆம் ஆண்டு புள்ளி விவரங்களோடு ஒப்பீடுகையில், இந்தாண்டு 101 கொலை சம்பவங்கள் குறைவாகும் என்றாா் அவா்.