மேட்டூர் அணை: நீர்வரத்து 1.10 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,10,000 கனஅடியாக அதிகரிப்பு.
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,10,000 கனஅடியாக அதிகரிப்பு.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையின் காரணமாக கபினி கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் உபரி நீர் வரத்து மற்றும் மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால்அணைக்கு வரும் வெள்ள நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
சுரங்க மின் நிலையம் மற்றும் அணை மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23,000கன அடி நீரும் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 87,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.