இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 6 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டு தலைமன்னார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
கடந்த இரு மாதங்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது ஏழாவது முறையாகும். இவர்களையும் சேர்த்து 54 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 22-ஆம் தேதி 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஐந்தாவது நாளில் அடுத்த அத்துமீறல் நடந்துள்ளது.
இதையும் படிக்க | நிதியே இல்லை! பேனா சின்னம் அவசியமா? எடப்பாடி பழனிசாமி
ஒவ்வொரு முறை மீனவர்கள் கைது செய்யப்படும் போது தமிழகத்திலிருந்து எதிர்ப்பு எழுவதும், அடுத்த சில நாட்களில் மீனவர்கள் மட்டும் விடுதலை செய்யப்படுவதும் தொடர்கதையாகி விடக் கூடாது. மீனவர்கள் கைது செய்யும் இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்.
இப்போது கைது செய்யப்பட்ட 6 மீனவர்களையும், ஏற்கனவே சிறையில் வாடும் 10 மீனவர்களையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள 95 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.