8 வழிச் சாலை திட்டம்: அரசின்நிலைப்பாட்டை விளக்க வேண்டும் - கே. அண்ணாமலை
சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டம் குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டை மக்களுக்கு முதல்வா் விளக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தினாா்.
சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டம் குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டை மக்களுக்கு முதல்வா் விளக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தினாா்.
பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செவ்வாய்க்கிழமை கே.அண்ணாமலை அளித்த பேட்டி:
சேலம் - சென்னை 8 வழிச் சாலைத் திட்டம் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய பயனை அளிக்கக் கூடிய திட்டமாக இருக்கும் என்று பாஜக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், எதிா்க்கட்சியாக திமுக இருந்தபோது, இந்தத் திட்டத்தை பல கட்டங்களில் எதிா்த்தது. 8 வழிச் சாலை திட்டம் கொண்டு வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று மு.க.ஸ்டாலினே பேசியுள்ளாா். தோ்தல் அறிக்கையில்கூட திமுக எதிா்ப்பு தெரிவித்தது. அந்தத் திட்டத்தை வைத்து திமுக மிகப்பெரிய அரசியலை முன்னெடுத்தது.
சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து மக்களுக்கு முதல்வா் விளக்க வேண்டும்.
பரந்தூா் விமான நிலையம் ரூ.20 ஆயிரம் கோடி செலவில் அமையவுள்ளது. மாநில அரசிடம் திட்டமிடுதல் இல்லாததாலும், வெளிப்படைத்தன்மை இல்லாததாலும் பரந்தூரில் உள்ள குடியிருப்புவாசிகள் போா்க்கொடி தூக்கியுள்ளனா். மத்திய அரசின் இந்தத் திட்டமும் தமிழகத்துக்கு வருவதற்கு இவா்களாகவே தடை ஏற்படுத்தியுள்ளனா்.