உபரி நீர் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1, 85,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரளா மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை இரவு வினாடிக்கு 1,85,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து வினாடிக்கு 1,85,000கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 23,000 கனஅடி நீரும் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 1,62,000கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி வழியாக 1,62,000 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் 16 கண் பாலம் வெள்ளக் காடாக காணப்படுகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 45-வது நாளாக 120 அடியாக நீடித்து வருகிறது. அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.
ஜூன் 1ந்தேதி முதல் நேற்று வரை மேட்டூர் அணைக்கு 330 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. இதில் 324 டிஎம்சி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மட்டும் 103 டிஎம்சி தண்ணீர் விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 34 நாட்கள் வெள்ள நீர் 219டிஎம்சி வெளியேற்றப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வெள்ள கட்டுப்பாட்டு அறையில் மேட்டூர் அணை உதவி பொறியாளர் மதுசூதனன் மேற்பார்வையில் ஒரு உதவி பொறியாளர் இரண்டு மேற்பார்வையாளர்கள் உதவியாளர்கள் 24 பேர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதா மேட்டூர் இந்திரா நகர் தொட்டில்பட்டி தங்கமாபுரி பட்டினம் பகுதிகளில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசரஉதவி கோருவதற்காக மேட்டூர் சார் ஆட்சியர் தொலைபேசி எண், மேட்டூர் வட்டாட்சியர் தொலைபேசி எண்,கிராம நிர்வாக அலுவலர்கள், மேட்டூர் நகராட்சி ஆணையர்,மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் தொலைபேசி எண், கருமலை கூடல் மற்றும் மேட்டூர் காவல் ஆய்வாளர்கள் தொலைபேசி எண்கள் ஆகியோரின் தொலைபேசி எண்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் காவேரி கரை ஓரங்களில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.