முகப்பு
தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் ரூ. 32 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்ட திருக்குளக்கரை சரிந்தது!

காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார் குளம் பகுதியில் ரூ. 32 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் திருக்குளக்கரை சரிந்து போனது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 16 டிசம்பர், 2022 at 2:28 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:37 PM

காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார் குளம் பகுதியில் ரூ. 32 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் திருக்குளக்கரை சரிந்து போனது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அடுத்துள்ள ஐயங்கார்குளம் கிராமத்தில் புகழ்பெற்ற சஞ்சீவிராயத் திருக்கோயில், கைலாசநாதர் திருக்கோயில், மகாலட்சுமி திருக்கோயில் என பல புகழ்பெற்ற திருக்கோயில்கள் அமைந்துள்ளன.

புகழ்பெற்ற பல கோயில்கள் இருந்தாலும் இந்த திருக்கோயில்கள் முழுமையாக புனரமைக்கப்படுவதில்லை என பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு நீடித்து வருகிறது.

Advertisement

இந்நிலையில் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலையொட்டி சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 2 திருக்குளங்கள் அமைந்துள்ளன. இந்த திருக்குளங்கள் பராமரிப்பின்றிக் கிடப்பதாக அப்பகுதி பக்தர்கள் இந்து சமய அறநிலையத்துறை, ஆட்சியர்,  சட்டபேரவை உறுப்பினர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவு என பல இடங்களில் புகார் மனு அளித்துள்ளனர்.

இதன் வாயிலாக காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டு ரூ. 32 லட்சம் மதிப்பில் இத்திருக்குளம் தூர்வாரப்பட்டு புனரமைக்கும் பணி கடந்த மே மாதம் துவங்கியது.

இந்தப் புனரமைப்பு பணியை தனியார் கட்டுமான ஒப்பந்ததாரர் எடுத்திருந்த நிலையில் அரசு விதிகளின்படி எந்த புனரமைப்பும் சரிவர மேற்கொள்ளவில்லை. 

குறிப்பாக திருக்குளத்தின் நடுவில் ஆழப்படுத்துதல், கரைகளை முறையான கட்டுமானம் செய்து கட்டுதல் உள்ளிட்ட பணிகளை இந்த ஒப்பந்த நிறுவனம் முறையாக செய்யாமல், தற்போது வரை இப்பணி நிறைவு பெற்றதா என்பது குறித்த அறிவிப்புப் பலகை கூட திருக்குளத்தில் வைக்கப்படவில்லை.

இந்நிலையில் மாண்டஸ் புயலால் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை காரணமாக காஞ்சிபுரம் வட்டத்தில் மட்டும் 363 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக திருக்குளத்தின் கரைகளின் ஒரு பகுதி சரிந்துள்ளது. மேலும் திருக்குளத்தைச் சுற்றிலும் ஆங்காங்கே மண் சரிவு காரணமாக ஓட்டை விழுந்துள்ளது.

இந்தக் கட்டுமானப் பணிகளை துவங்கிய நாள் முதல் இதுவரை எந்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும் வந்து ஆய்வு செய்யவில்லை என்பதை தனக்கு சாதகமாக்கி ஒப்பந்ததாரர் தரமற்ற முறையில் பணிகள் செய்துள்ளதாக அப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.