மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர வீதியுலா
மார்கழி அஷ்டமி தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர வீதியுலா இன்று காலை நடைபெற்றது.
தமிழ்நாடுமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர வீதியுலா
மார்கழி அஷ்டமி தினத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பர வீதியுலா இன்று காலை நடைபெற்றது.
தேய்பிறை அஷ்டமி திதியன்று சகல ஜீவ ராசிகளுக்கும் இறைவன் படியளப்பதை நினைவு கூறும் வகையில் மதுரையில் மீனாட்சியம்மனும் , சுந்தரேஸ்வரரும் அஷ்டமி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்வு மதுரையில் இன்று நடைபெற்றது.
மதுரை வீதிகளில் வலம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலையோரம் காத்திருந்து சப்பரத்தை வரவேற்று தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றானதும் உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளுக்கும் சிவபெருமான் உணவு படியளக்கும் திருவிழாவாக மார்கழி அஷ்டமி தினத்தை முன்னிட்டு கொண்டாடப்படும் அஷ்டமி சப்பர விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது .
விழாவையொட்டி , முன்னதாக அருள்மிகு மீனாட்சியம்மனும் அருள்மிகு சுந்தரேஸ்வரரும் ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் எழுந்தருளியதைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பூஜைகளையடுத்து மதுரை வெளி வீதிகளில் அம்மனும் சுவாமியும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மேலும், இவ்விழாவில் மீனாட்சி அம்மன் வீற்றிருக்கும் தேரினை பெண்கள் மட்டுமே இழுத்து வருவது இந்த விழாவின் சிறப்பம்சமாகும்.
அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளக்கும் நிகழ்வைக் கூறும் வகையில் அஷ்டமி சப்பரம் புறப்பாட்டின்போது கோயில் நிலத்தில் விளைந்த நெல் அரிசி ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது .
ஏற்றத் தாழ்வின்றி அனைத்து மக்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நடைபெறும் இவ்விழாவில் கிடைக்கபெறும் பிரசாதத்தை கொண்டு வந்து வீட்டில் அரிசி பானையில் போட்டு வைத்தால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைக்கும், வளர்ச்சியும் கூடும் என்பது நம்பிக்கை என்பதால் விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலைகளில் சிதறிய நெல் மற்றும் அரிசிகளை வீடுகளுக்கு எடுத்து சென்றனர் .