சீர்காழியில் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
சீர்காழி அருகே திருக்கோலக்கா தெருவில் மழையால் ஏற்பட்ட பாதிப்பில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.
சீர்காழி அருகே திருக்கோலக்கா தெருவில் மழையால் ஏற்பட்ட பாதிப்பில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திருக்கோலக்கா தெருவில் கூரை வீட்டில் வசிப்பவர் ருக்மணி(80). சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக இவரது கூரை வீட்டின் சுவர் சேதமடைந்து இருந்தது. வழக்கம்போல் ருக்மணி வீட்டில் உள்ள கட்டிலில் உறங்கியுள்ளார்.
இன்று அதிகாலை சேதம் அடைந்திருந்த வீட்டின் பக்கவாட்டுச் சுவர் முழுவதுமாக இடிந்து வீட்டின் உள்ளே விழுந்தது. கட்டிலில் உறங்கிய ருக்மணி மீது சுவர் விழுந்ததால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்று காலை அவரது மகள் உணவு கொடுப்பதற்காக வீட்டிற்கு வந்து கதவை திறந்து பார்த்தபோதுதான் சுவர் இடிந்து விழுந்து தனது தாய் இறந்து கிடப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுவற்றை அகற்றி ருக்மணியின் உடலை மீட்டனர்.
தகவல் அறிந்து வந்த சீர்காழி காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.