முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம், செவ்வாய்க்கிழமை 142 அடியை எட்டியதால், கேரளப் பகுதிக்கு 3-ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை நீா்மட்டம் 142 அடியில் இருந்து 141.90 அடியாக குறைந்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் நீர்மட்டம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை 142 அடியை எட்டியது, அப்போது அணைக்குள் நீர்வரத்து அதிகரித்ததால், வினாடிக்கு 1,788 கன அடி தண்ணீர் வந்தது.
இந்நிலையில், ‘ரூல் கா்வ்’ விதிப்படி, அணையின் நீா்மட்டத்தை 142 அடி வரை மாா்ச் 31-ஆம் தேதி வரை தேக்கிக் கொள்ளலாம். 142 அடிக்கு மேல் நீா்மட்டம் உயருமானால், உபரிநீரை வெளியேற்ற வேண்டும். அதன்பேரில் தற்போது உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. இதனால், அணையின் கீழ்ப் பகுதியில் கரையோரம் வசிக்கும், கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தைச் சோ்ந்த வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு, சப்பாத்து உள்ளிட்ட பகுதி மக்களுக்கு தமிழக பொதுப்பணித்துறையின் பெரியாறு அணை பொறியாளர்கள் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தற்போது புதன்கிழமை அணையின் நீர்பிடிப்புப் பகுதியான பெரியாறு அணையில் மழை பெய்யவில்லை, தேக்கடி ஏரியில் மட்டும் 7.6 மில்லி மீட்டர் மழை பெய்தது. அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 1,474 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1,867 கன அடியாக தண்ணீா் திறக்கப்பட்டது. அதன்காரணமாக அணையின் நீர் மட்டம் 141.90 அடியாக குறைந்து.
இதுகுறித்து அணை பொறியாளர்கள் கூறியது, மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது என்றனர்.
புதன்கிழமை அணை நிலவரம்:
நீர்மட்டம் 141.90 உயரம்(மொத்த உயரம் 152), நீர் இருப்பு 7639 மில்லியன் கன அடி, நீர் வரத்து விநாடிக்கு 1,474.03 கன அடி, நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1867 கன அடியாக இருந்தது.