புத்தாண்டு கொண்டாட புதுச்சேரி செல்வோர் கவனிக்க..
2022ஆம் ஆண்டின் கடைசி நாளில் இருக்கிறோம். பலரும் இன்றே புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து திட்டமிட்டிருப்போம்.
2022ஆம் ஆண்டின் கடைசி நாளில் இருக்கிறோம். பலரும் இன்றே புத்தாண்டு கொண்டாட்டம் குறித்து திட்டமிட்டிருப்போம். எனவே, புத்தாண்டு கொண்டாட சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக புதுச்சேரி செல்ல திட்டமிட்டிருந்தால், நிச்சயம் இது பயனுள்ள தகவலாக இருக்கும்.
இதையும் படிக்க.. கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது; கடைசியாக கொண்டாடும் நாடு எது?
அதாவது, கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சொந்த வாகனங்களில் அதுவும் இரவு நேரத்தில் செல்வதாக இருந்தால், ஒரு முறைக்கு இரு முறை நன்றாக சிந்தித்து முடிவெடுங்கள். ஏனென்றால், கிழக்குக் கடற்கரை சாலையில் நடுவில் கொஞ்சம் பாக்கத்தைக் காணோம் என்பது போல, பல இடங்களில் சாலைகள் பல்லாங்குழிகளாக மாறி, வாகன ஓட்டிகளைப் பார்த்து நகைத்துக் கொண்டிருக்கிறது.
மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரையிலான 95 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் வருகிறது. இதனை விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், இப்பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகளும் மூடப்பட்டுவிட்டன.
இதையும் படிக்க.. மஸ்தான் கொலைக்கு முன் முக்கிய குற்றவாளி பார்த்த கொலை விடியோக்கள்
சுங்கச்சாவடிகள் மூடப்பட்டுவிட்டதால், இந்தச் சாலைகள் பராமரிப்பு இல்லாமல், படுகுழிகளுடன் யாரை விழுங்குவது என்று காத்திருக்கின்றன.
இரவில் இப்பகுதியில் புதிதாக வருவோர் நிச்சயம் ஓரிரு பள்ளங்களில் தட்டுத்தடுமாறித்தான் செல்கிறார்கள் என்றும், இவ்வழியாக இரண்டு முறை பயணித்தால் நிச்சயம் முதுகுவலி இலவசம் என்றும் இப்பாதையை தினமும் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் கூறுகிறார்கள்.
புத்தாண்டு கொண்டாட்டம் என்றால், குறிப்பாக இளசுகள்தான், இரு சக்கர வாகனத்தில் பறப்பார்கள். சாலைகள் நன்றாக இருந்தாலே விபத்து ஏற்படும் அபாயம் அதிகமிருக்கும் நிலையில், சாலைகள் மிக மோசமாக இருப்பதால் இளசுகளாக இருந்தாலும் பெரியவர்களாக இருந்தாலும் கிழக்குக் கடற்கரைச் சாலையை கடப்பதாக இருந்தால் கவனம் தேவை..