காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு பூட்டுப் போட்ட மாவட்ட நிர்வாகி
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர் கட்சி அலுவலகத்திற்குப் பூட்டுப் போட்டு போராட்டம் நடத்தினர்.
திருச்சி: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் காங்கிரஸுக்கு 4 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிவரும் நிலையில், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் காங்கிரஸ் திருச்சி தேர்தல் பணிக் குழு உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சிக்கு போதிய வார்டுகள் ஒதுக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகிகளே காரணம் என அக்கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநகர் மாவட்ட துணைத்தலைவர் சக்கரபாணி தலைமையில் நிர்வாகிகள் சிலர் கட்சி அலுவலகத்திற்குப் பூட்டுப் போட்டு போராட்டம் நடத்தினர்.
இதையறிந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் அலுவலகத்தைத் திறந்து திருச்சி மாநகராட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.