நேரடித் தேர்வு: புதுச்சேரி அரசு பட்ட மேற்படிப்பு மைய மாணவர்கள் போராட்டம்
நேரடி தேர்வைக் கண்டித்து புதுச்சேரியில் அரசு பட்டமேற்படிப்பு மைய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி: நேரடி தேர்வைக் கண்டித்து புதுச்சேரியில் அரசு பட்டமேற்படிப்பு மைய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் இணையவழியில் ஆண்டு தேர்வு வைக்காததைக் கண்டித்து, காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம் லாஸ்பேட்டையில் இயங்கி வருகிறது. தன்னாட்சி அதிகாரத்துடன் இயங்கி வரும் அரசு உயர் கல்வி நிறுவனமான இவற்றில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். எம்.ஏ., எம்.எஸ்.சி. உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன.
நிகழாண்டு கரோனா தொற்று காரணமாக, இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், நிகழாண்டு ஆண்டு செமஸ்டர் தேர்வு பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடித் தேர்வாக மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தேர்வினை மட்டும் நேரடியாக நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனைக் கண்டித்து சனிக்கிழமை பட்ட மேற்படிப்பு மைய வளாகத்தில் திரண்ட 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பருவத் தேர்வு இணைய வழியில் நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.