பெரம்பூரில் விஜய் போட்டியிட்டால்... சேகர்பாபு பதில்!
முதல்வர் மு.க. ஸ்டாலின் அபிமன்யூ வியூகத்தை அமைத்துக்கொண்டிருப்பதாக அமைச்சர் சேகர்பாபு பேசியது குறித்து...
பெரம்பூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை என திமுக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அபிமன்யூ வியூகத்தை அமைத்துக்கொண்டிருப்பதாகவும், இதை உடைக்கும் சக்தி அதிமுகவுக்கு இல்லை எனவும் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி கூட்டணியுடனான தொகுதிப் பங்கீட்டில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தேர்தலையொட்டி சென்னை கபாலீஸ்வரர் திருக்கோயிலில் வழிபாடு செய்துவிட்டு தமிழிசை செளந்தரராஜனுடன் மயிலாப்பூரில் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) பிரசாரத்தை தொடங்கினார்.
சென்னையில் மூன்று தொகுதிகளில் பாஜகவும் மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக நேரடியாகவும் களம் காண்கிறது. நடிகர் விஜய்யும் பெரம்பூரில் விஜய் பிரசாரம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:
''பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட்டாலும் பிரசாரம் செய்தாலும் ஒரு பிரளயமும் ஏற்படப்போவதில்லை. வந்தார், சென்றார் என்ற அளவில்தான் இருக்கும்.
கூட்டணியில் இருக்கும் கட்சிகளை கோட்டைவிட்டவர்கள்தான் அதிமுகவினர். தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, வேட்பாளர்களை அறிவித்ததால், அவர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள் என்று கூற முடியாது.
திமுகவின் முந்தைய அறிக்கையின் நகலாகவே அதிமுகவின் தேர்தல் அறிக்கை உள்ளது.
சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள 22 தொகுதிகளிலும் திமுக உறுப்பினர்களே வெற்றி பெறுவார்கள். முதல்வர் மு.க. ஸ்டாலின் யாரை நிறுத்தினாலும் வெற்றி பெறுவார்கள். அவர்களை வெற்றி பெறச் செய்ய மக்கள் தயாராக உள்ளனர்'' என சேகர்பாபு பேசினார்.