தவெகவில் தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து விஜய் உத்தரவு!
தவெக தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம் தொடர்பாக...
தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
”வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தேர்தல் பணிகளைக் கண்காணிக்க, சட்டமன்றத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
Advertisement
சட்டமன்றத் தேர்தல் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனது நேரடி ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி இந்தத் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இயங்குவார்கள்.
தலைமைக் கழக மையத் தேர்தல் அலுவலகத்தின் (Headquarters Central War Room) துணையுடன் தலைமைக் கழகம் அளிக்கும் நெறிமுறைகளுக்கு உள்பட்டு இவர்கள் செயல்படுவார்கள்.
குறிப்பாக, மாவட்ட வாரியாகவும் தொகுதி வாரியாகவும் தேர்தல் முன் தயாரிப்புப் பணிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டங்களை இவர்கள் ஒருங்கிணைப்பார்கள்.
இந்தப் பணிகளைப் பொதுச் செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்ட சட்டமன்றத் தேர்தல் முதன்மைக் கண்காணிப்பாளர்களின் உறுதுணையோடு ஒருங்கிணைக்க உள்ள மாவட்ட வாரியான தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு. இணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் தவெகவின் அனைத்து நிலை நிர்வாகிகளும் தோழர்களும், அவர்களது பொறுப்பு மாவட்டங்கள் சார்ந்து, முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.