கொளத்தூர் தேர்தல் பிரசாரம்! விஜய் மீது வழக்குப்பதிவு!
தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக...
சென்னை கொளத்தூரில் தேர்தல் பிரசாரத்தின்போது, விதிகளை மீறியதாக தவெக தலைவர் விஜய் மீது பெரவள்ளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதையொட்டி, வியாசர்பாடி தேர்தல் அலுவலகத்தில் நேற்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து பெரம்பூர் பகுதியில் தனது பிரசாரத்தைத் தொடங்கி மக்களிடையே வாக்கு சேகரித்தார்.
பெரம்பூரைத் தொடர்ந்து கொளத்தூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.
பெரவள்ளூர் - செம்பியம் காவல் நிலைய எல்லைகளுக்கு மத்தியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தபோது, இரு இடங்களில் அனுமதி பெற வேண்டிய நிலையில் பெரவள்ளூரில் மட்டும் அனுமதி பெற்றதாக சர்ச்சை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, செம்பியம் காவல்துறையினர் மற்றும் தவெக நிர்வாகிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் ஒலிபெருக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், நிலை கண்காணிப்புக் குழு அதிகாரி குமார் அளித்த புகாரில் விஜய் மீது பெரவள்ளூர் காவல் நிலையத்தில், ஆம்புலன்ஸ் செல்லும் பாதையை மறைத்தது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தேர்தல் அதிகாரிகளிடம் அளித்த உறுதிமொழியை மீறி 30 ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அளித்த புகாரில் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.