நடிகையும் ஆந்திர மாநில எம்எல்ஏவுமான ரோஜா, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
ஆந்திர மாநிலம் நகரி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.கே.ரோஜா, இன்று முதல்வரை சந்தித்து ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்ப் புத்தகம் வழங்குவது உள்ளிட்ட சில கோரிக்கைகள் குறித்துப் பேசினார்.
அப்போது, நெசவாளர்களைக் கொண்டு பட்டுத் துணியால் நெய்யப்பட்ட மு.க.ஸ்டாலினின் புகைப்படம் அடங்கிய சால்வையை முதல்வரிடம் நடிகை ரோஜா வழங்கினார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், திரைப்பட இயக்குநர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, 'ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள தமிழகப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு ஒத்துழைப்பு வழங்கக் கோரினேன். நெடும்புரம்- அரக்கோணம் தேசிய நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் தமிழ் வழிக்கல்வி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கவும் கோரிக்கை விடுத்தேன்' என்றார்.