திருச்சி: மணப்பாறை அருகே சமயபுரம் பாதயாத்திரை சென்ற பக்தர்களுக்கிடையே தக்காளி ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி புகுந்து ஏற்பட்ட விபத்தில் நிகழ்விடத்திலேயே பக்தர்கள் மூன்று பேர் பலியாகினர். 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பகுதியிலிருந்து சுமார் 3 ஆயிரம் பக்தர்கள் மாலையில் பாதயாத்திரையாக புறப்பட்டனர். இதில் பல்வேறு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள் ஒன்று சேர்ந்து பயணம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து தக்காளி ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை இடையப்பட்டியான்பட்டி பகுதியில் சாலையோரம் நடந்து சென்ற பக்தர்களுக்கிடையே புகுந்தது.
இதில் நடுப்பட்டி சீகம்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு, எரியோடு எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த சேகர் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பெண் பக்தர் ஒருவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்தார்.
இந்த விபத்தில் மேலும் ரம்யா, மணிகண்டன், முத்துபாண்டி என பெண்கள் உள்ளிட்ட 6 பக்தர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற நெடுஞ்சாலை விபத்து மீட்புக்குழு மற்றும் காவலர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருநாவுக்கரசு, சேகர் உடல்கள் உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து மணப்பாறை காவலர்கள் வழக்குப் பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய ஈச்சர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.