டெல்டா மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
டெல்டா மாவட்டங்கள், கடலூா் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
டெல்டா மாவட்டங்கள், கடலூா் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் சனிக்கிழமை கூறியது:
தென் தமிழக கடற்கரையை ஒட்டி (4.2 முதல் 5.8 கி.மீ. உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்கள், கடலூா் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜன.3: தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஜனவரி 3-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
ஜன.4: தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஜனவரி 4-ஆம் தேதி லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.
ஜன.5: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஜனவரி 5-ஆம் தேதி பெரும்பாலும் வட வானிலை நிலவும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் திருவள்ளூா் மாவட்டம் சோழவரம், செங்குன்றத்தில் தலா 100 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தலா 90 மி.மீ., காஞ்சிபுரம், சென்னை பெரம்பூா், கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் தலா 70 மி.மீ., திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, வேலூா் மாவட்டம் விரிஞ்சிபுரம், கடலூா் மாவட்டம் புவனகிரி, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் தலா 60 மி.மீ., கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, திருவள்ளூா் மாவட்டம் அம்பத்தூா், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூா், வேலூா் மாவட்டம் குடியாத்தம், சென்னை டிஜிபி அலுவலகத்தில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜனவரி 3-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.