இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கில் போலீசார் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த வியாழக்கிழமை (ஜன. 6) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) மட்டும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை வெளியிட்டாா். இந்த நிலையில், இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கில் போலீசார் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க- கரோனா விதிகளை பின்பற்றவில்லை எனில்...எச்சரிக்கும் அஸ்ஸாம் அரசு
அதில், அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை எக்காரணம் கொண்டு தடை செய்யக்கூடாது.
அடையாள அட்டையுடன் பயணிக்கும் பணியாளர்களை உடனே அனுமதிக்க வேண்டும்.
நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு செல்வோர் அழைப்பு கடிதத்தை காண்பித்தால் அனுமதிக்க வேண்டும்.
அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், பணி முடிந்து திரும்புவோரை அனுமதிக்க வேண்டும்.
ஊரடங்கு வாகனச்சோதனையின்போது கனிவாகவும், மனித நேயத்துடனும் நடந்து கொள்ள வேண்டும்.
பத்திரிகை, மருத்துவம், பால், மின்சாரம், சரக்கு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியாளர்களை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.