கூத்தாநல்லூர்: மார்கழி மாத பஜனை குழுவினருக்கு சான்றிதழ் வழங்கல்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் மார்கழி மாத பஜனைக் குழுவினர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் மார்கழி மாத பஜனைக் குழுவினர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
லெட்சுமாங்குடி, மரக்கடை நால்வர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், ஆண்டுதோறும் மார்கழி மாதம் 30 நாள்களும் விடியற்காலை கிருஷ்ணனின் பாடல்களைப் பாடியபடி, மரக்கடை, லெட்சுமாங்குடி உள்ளிட்ட முக்கிய தெரு வீதிகளில் சுற்றி வருவார்கள். அந்த மார்கழி மாத பஜனைக் குழுவினர்களுக்கு, அகிலாண்டம் பிள்ளை ராஜம்மாள் அறக்கட்டளை சார்பில், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஏ.சண்முகம் ஏற்பாட்டின்படி, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடத்தப்பட்டன.
மரக்கடை உத்திராபதீஸ்வரர் கோயிலில், கரோனா தொற்று விதிமுறைகளுக்கு உள்பட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு, கூத்தாநல்லூர் ரோட்டரி சங்கத் தலைவர் வி.எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தார். மார்கழி மாத பஜனைக் குழுவைச் சேர்ந்த 65 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சண்முகம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
தலைவர் எஸ்.உத்திராபதி, செயலாளர் எம்.நாடி முத்து, பொருளாளர் வி.கருணாகரன், சமூக ஆர்வலர் பாலசுப்ரமணியன் மற்றும் உறுப்பினர்கள் கவனித்தனர். நிகழ்ச்சியில், ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.