ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 83 காவலர்கள் கரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. முன்களப் பணியாளர்களான காவல்துறையினரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் பணியாற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 5 போலீசாருக்கு இன்று கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு லேசான அறிகுறி என்பதால் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
தடுப்பு நடவடிக்கையாக கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் போலீஸ் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்கள் கொண்டு வரும் மனுக்கள் போலீஸ் நிலையத்திற்கு வெளியே இருந்து வாங்கப்பட்டு வருகிறது.
மாவட்டம் முழுவதும் இதுவரை 83 போலீசாருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது. .