சங்ககிரி: குடியரசு நாளையொட்டி சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனை மற்றும், வடுகப்பட்டி அரசு ஆரம்பசுகாதார நிலையம், சங்ககிரி, வி.என்.பாளையம் யங்ஸ்டார் கிரிக்கெட் கிளப் ஆகியவைகளின் சார்பில் ரத்த தான முகாம் வி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் 25வது முறையாக புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் எம்.ஆர்.குமாரசாமி இம்முகாமினை தொடக்கி வைத்தார். சங்ககிரி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் கே.சண்முகம், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேலம் அரசு மருத்துவமனை மருத்துவர் ரவீந்திரன், வடுகப்பட்டி மருத்துவர் அமுதராணி ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரத்த தானம் பெறும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.
யங்ஸ்டார் கிரிக்கெட்கிளப் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் உட்பட 100 பேர் ரத்ததானம் வழங்க பதிவு செய்து ரத்ததானம் அளித்து வருகின்றனர். வி.என்.பாளையம் ஊர்பொதுமக்கள், இளைஞர்கள், சங்ககிரி நகரில் உள்ள பல்வேறு பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
விழாக்குழுவினர் சார்பில் ரத்ததானம் அளிப்பவர்களுக்கு பல்வேறு வகையான பழங்கள், அசைவ உணவுகள் வழங்கப்பட்டன. சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலர் கே.கே.நடேசன், உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.