வெறும் காய்ச்சல் மட்டும்தான் இருக்கிறது. இதற்கு ஏன் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ஏராளமானோர் கேட்கும் போக்கு ஏற்பட்டுள்ளது.
மாரடைப்பு, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, என்ன காய்ச்சலா? என்று காய்ச்சல் வந்தவர்களைப் பார்த்து நாலடி பின்னுக்குத் தள்ளி நிற்கும் நிலையை உருவாக்கியது இந்த கோர முகம் கொண்ட கரோனா தொற்றுதான்.
கடந்த காலங்களைப் போல அல்லாமல் இந்த அலை, காய்ச்சல், உடல் வலி என அறிகுறிகளுடன் வந்து சில நாள்களில் சென்றுவிடுவதால், மக்கள் பெரிதாக கரோனா பரிசோதனை செய்து கொள்ள முன்வருவதில்லை.
இதையும் படிக்க.. வெள்ளையா, கருப்பா, ஒல்லியா, குண்டா இருக்கோம்னு கவலையா?
ஆனால், அதுதான் அவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள். காய்ச்சல் வந்ததுமே பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு, பரிசோதனை முடிவு வருவதற்குள் காய்ச்சல் குணமாகிவிடுகிறது. ஆனால், ஒருவருக்கு காய்ச்சல் வந்து அவர் குணமடைவதற்குள், அவருடன் இருப்பவர்களுக்கு அந்தக் காய்ச்சல் தொற்றிக் கொள்கிறது. இதனால், தொடர்ந்து ஒரு குடும்பத்தில் அடுத்தடுத்து பலருக்கும் காய்ச்சல் பரவுகிறது என்கிறார்கள் சுகாதாரத் துறையினர். இது உண்மையும் கூட.
இதனால் என்ன நடக்கிறது என்றால், ஒரு ஆரோக்கியமானவருக்கு கரோனா பாதித்து காய்ச்சல் வந்து, அவர் பரிசோதனை செய்து கொள்ளாமல் இருந்துவிட்டால், 3 நாள்களில் சரியாகிவிடும். ஆனால் அவருடன் ஏற்கனவே இணைநோய் இருப்பவர்கள், வயதானவர்களுக்கும் இந்த தொற்று பாதித்து அவர்களது உடல்நலன் வெகுவாக பாதிக்கும் அபாயம் உள்ளது.
எவர் ஒருவருமே கரோனா உறுதி செய்யப்பட்டாலொழிய, தனிமைப்படுத்திக் கொள்வது என்பதை அந்த அளவுக்கு உறுதியோடு கைகொள்ள மாட்டார்கள். எனவே, காய்ச்சல் வந்தால் உடனடியாக பரிசோதனை செய்து தனிமைப்படுத்திக் கொண்டு, தேவையான மருந்துகளை எடுத்துக் கொள்வதுதான் சரியான முறையே தவிர, பரிசோதனை செய்யாமல், காய்ச்சலை நம்முடன் இருப்பவர்களுக்கு பரப்புவது சரியான முறையல்ல என்கிறார்கள் அதிகாரிகள்.