கரோனா: தஞ்சாவூர் முன்னாள் எம்.பி சிங்கார வடிவேல் காலமானார்
தஞ்சாவூர் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினர் சி. சிங்கார வடிவேல் (87) கரோனா தொற்றால் திங்கள்கிழமை காலை காலமானார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினர் சி. சிங்கார வடிவேல் (87) கரோனா தொற்றால் திங்கள்கிழமை காலை காலமானார்.
திருவாரூர் மாவட்டம், வடுவூர் அருகேயுள்ள எடமேலையூர் கிராமத்தைச் சேர்ந்த இவர் 1937, மார்ச் 17 ஆம் தேதி பிறந்தார். பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சார்ந்த இவர், பெருந்தலைவர் காமராசரின் எளிமையால் கவரப்பட்டு அக்கட்சியில் இணைந்தார்.
இவர் 1979 இடைத்தேர்தல், 1980, 1984, 1989- இல் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று நான்கு முறை மக்களவை உறுப்பினராக இருந்தார். இவருக்கு தமிழக அரசு 2012 ஆம் ஆண்டு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கிக் கௌரவித்தது.
இதையும் படிக்க | தை அமாவாசை: காவிரிக்கரையில் தர்பணம் கொடுக்க குவிந்த மக்கள்
தஞ்சாவூர் யாகப்பா நகரில் வசித்து வந்த இவர் சில நாள்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இவர் திங்கள்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவருக்கு மனைவி கஸ்தூரி பாய், மகன் திருவேரகன், மகள் சுமதி உள்ளனர்.