முகப்பு
தமிழ்நாடு

விளாத்திகுளம் அருகே வாகன சோதனையில் துப்பாக்கி பறிமுதல்

விளாத்திகுளம் அருகே வாகன சோதனையில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, ஏர்கன், மான் தோல், கவுதாரி பறவைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
வாகனத் தணிக்கையில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி.
பகிர்:

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே வாகன சோதனையில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, ஏர்கன், மான் தோல், கவுதாரி பறவைகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குளத்தூர் காவல் நிலைய சரகம் அரசன்குளம் - பூசனூர் காட்டுப்பகுதியில் வெடி வெடிக்கும் சத்தம் கேட்டதையடுத்து அப்பகுதி மக்கள் வியாழக்கிழமை இரவு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து குளத்தூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் இருதயராஜ் தலைமையிலான போலீசார் விளாத்திகுளம் - குளத்தூர் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படியாக சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். 

சோதனையில் இரட்டைக்குழல் துப்பாக்கி, ஏர்கன் மற்றும் 6 கவுதாரி பறவைகள் மான் தோல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

விளாத்திகுளம் - குளத்தூர் சாலையில் வாகனத் தணிக்கையின் போது துப்பாக்கி, ஏர்கன், கவுதாரி பறவைகள், மான் தோல்களுடன் பிடிப்பட்ட கார்.

இது தொடர்பாக  காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி வி.இ. ரோடு பகுதியைச் சேர்ந்த நாராயணன் மகன் முருகன் (60) தூத்துக்குடி பி அன்ட்  காலனியை சேர்ந்த மாசிலாமணி மகன் அசோக் (47) என்பதும், இருவரும் தூத்துக்குடியில் பிரபல உப்பு கம்பெனியின் கட்டுமான பிரிவில் பணியாற்றி வருகின்றனர் என்பதும் தெரியவந்தது.   

இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி, ஏர்கன், கவுதாரி பறவைகள், மான் தோல் ஆகியவற்றையும் பிடிபட்ட இருவரையும் போலீசார் விளாத்திகுளம் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.   

விளாத்திகுளம் வனச்சரக அலுவலகத்தில் வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →