சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டம் ரூ.30 கோடி செலவில் நவீன முறையில் சீரமைப்பு செய்யப்படும் என செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை வள்ளூவர் கோட்டத்தில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன் உள்ளிட்டோர் மேற்கொள்ளப்பட உள்ள சீரமைப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:
முன்னாள் முதல்வர் கலைஞரால் உருவாக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, பிறகு சரியான முறையில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. சமீபத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்தபொழுது, வள்ளுவர் கோட்டம் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்தார். வள்ளுவர் கோட்டம் 30 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஷிண்சோ அபே உடல்நிலை கவலைக்கிடம்: ஜப்பான் பிரதமர்
மேலும், வள்ளுவர் கோட்டத்தில் உள்ள கலையரங்கம் குளிர்சாதன வசதியோடு நவீன முறையில் சீரமைப்பு செய்யப்பட்டு, மீண்டும் இந்த அரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். உலக செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் அமைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
எனவே, பொதுப் பணித் துறை சார்பில் இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.