முகப்பு
தமிழ்நாடு

பிரிந்த கட்சியை ஒன்றிணைப்பதே என் பணி: சசிகலா

பிரிந்து கிடக்கும் கட்சியை (அதிமுக) ஒன்றிணைப்பதே என் பணி என்றார் வி.கே. சசிகலா.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
சசிகலா
பகிர்:

பிரிந்து கிடக்கும் கட்சியை (அதிமுக) ஒன்றிணைப்பதே என் பணி என்றார் வி.கே. சசிகலா.
 தஞ்சாவூரில் சசிகலாவுடன், திவாகரன் தலைமையிலான அண்ணா திராவிடர் கழக இணைப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சசிகலா பேசியது:
 எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவை சந்தித்தது. அன்றைக்கு அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை என்றும், அதிமுகவின் கதை முடிந்துவிட்டது எனவும் எத்தனையோ பேர் கூறினர். அந்தக் கனவோடுதான் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இருந்தார். ஆனால், அவர்களுடைய கனவை மொத்தமாகக் கலைத்தோம்.
 ஒரு பிரிந்த கட்சியை எப்படிச் சேர்ப்பது என்ற கலையை நான் தெளிவாகக் கற்றுக் கொண்டேன். எனவே, அனைவரையும் ஒன்றுபடுத்தி, கட்சியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்வதே என் எஞ்சியுள்ள வாழ்க்கையின் லட்சியமாகக் கருதுகிறேன்.
 ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2016 டிசம்பர் மாதம் வரை நடைபெற்ற பொதுக் குழுக்கள்தான் உண்மையானவை. அந்த பொதுக் குழுக்கள்தான் கட்சியின் சட்ட விதிகளின்படி முறையாக அழைப்புக் கொடுத்து, ஒட்டுமொத்த தொண்டர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. அதன்பிறகு நடைபெற்றதாக சொல்லப்படும் பொதுக் குழுக்கள் அனைத்தும் நிர்வாகிகள் கூட்டமாகத்தான் தொண்டர்கள் பார்க்கின்றனர்.
 அதிமுக வரலாற்றிலேயே இதுபோன்று ஆண்டுக்கு ஒரு முறை கட்சியின் சட்ட விதிகளை யாருமே மாற்றியதில்லை. இவர்கள் செய்கிற பணிகள் அனைத்துமே சட்டப்படி செல்லாது. இதற்கெல்லாம் விரைவில் நல்ல தீர்வு ஏற்படும் என்றார் சசிகலா. இவ்விழாவில் வி.கே. திவாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →