கள்ளக்குறிச்சி கலவரம்: டிஐஜியிடம் நலம் விசாரித்தார் முதல்வர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரத்தின்போது படுகாயமடைந்த டிஐஜி பாண்டியனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் ஏற்பட்ட கலவரத்தின்போது படுகாயமடைந்த டிஐஜி பாண்டியனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டிஐஜியிடம் தொலைபேசி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாடினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் நேற்று (ஜூலை 18) கலவரம் நிகழ்ந்தது. கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வந்தது.
அந்தவகையில் நேற்று (ஜூலை 17) நடைபெற்ற போராட்டத்தில், கலவரம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் பள்ளியை முற்றுகையிட்டு பேருந்துகளை எரித்து கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். காவலர்கள் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். இதில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் டிஐஜி பாண்டியன் உள்பட 100க்கும் மேற்பட்ட காவலர்கள் படுகாயமடைந்தனர்.
படுகாயமடைந்த காவலர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சிகிச்சையிலுள்ள டிஐஜி பாண்டியனிடன் தொலைபேசி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.