இந்திய வெளியுறவுக் கொள்கை ஒரு நகைச்சுவை: ராகுல்காந்தி
இந்திய வெளியுறவுக் கொள்கை ஒரு உலகளாவிய நகைச்சுவையாக உள்ளது என ராகுல் காந்தி தெரிவித்தது குறித்து...
இந்திய வெளியுறவுக் கொள்கை ஒரு உலகளாவிய நகைச்சுவையாக உள்ளது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஈரான், இஸ்ரேல் - அமெரிக்கா ஆகியவற்றுக்கு இடையேயான மத்தியஸ்தம் செய்யும் நாடுகளுள் ஒன்றாக பாகிஸ்தான் இருப்பதாக வரும் செய்திகள் குறித்தும், மேற்கு ஆசிய போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,
“நமது வெளியுறவுக் கொள்கை என்பது பிரதமர் மோடியின் தனிப்பட்ட வெளியுறவுக் கொள்கையாக உள்ளது. இதன் விளைவை நீங்கள் பார்க்கலாம். இது ஒரு உலகளாவிய நகைச்சுவை. எல்லோரும் இதனை அவ்வாறே கருதுகிறார்கள்.
மோடியால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்குச் சரியாகத் தெரிகின்றது. எனவே, நாட்டின் பிரதமரே சமரசம் செய்துகொண்டால், நமது வெளியுறவுக் கொள்கையும் சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும், பிரதமர் மக்களவையில் திங்கள்கிழமை (மார்ச் 23) ஆற்றிய உரை சம்பந்தமில்லாததாக இருந்தது. அவர் இந்தியாவின் பிரதமர்; இந்தியாவின் பிரதமர் என்பது போலத் தோன்ற வேண்டும். அவர் அந்தப் பதவியில் இல்லாதவர் போன்று நடந்துகொள்கிறார்.
இதனால், மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது வருத்தமளிக்கிறது. இது இப்போதுதான் தொடங்கியுள்ளது. எல்பிஜி, பெட்ரோல், உரம் என எல்லாவற்றிலும் நாம் பிரச்னைகளைச் சந்திப்போம்” எனத் தெரிவித்தார்.