செஸ் ஒலிம்பியாட் சிறப்பாக நடைபெற வேண்டி பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் வழிபாடு
சர்வதேச சதுரங்க போட்டிகள் சிறப்பாக நடைபெறவேண்டி தேவாரப்பாடல்பெற்ற நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம்: சர்வதேச சதுரங்க போட்டிகள் சிறப்பாக நடைபெறவேண்டி தேவாரப்பாடல்பெற்ற நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்றது. கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தாற்போல் இக்கோயிலில் தான் சாமுண்டீஸ்வரி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இதையும் படிக்க.. குடியரசுத் தலைவராக தகுதி என்ன? சம்பளம் எவ்வளவு??
தமிழகத்தின் மாமல்லபுரத்தில் வருகிற 29ம் தேதி 44-வது சர்வதேச சதுரங்க போட்டிகள் துவங்க இருக்கும் நிலையில், சர்வதேச சதுரங்க போட்டிகள் சிறப்பான முறையில் நடைபெற பிரார்த்தித்து கும்பகோணம், ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர், தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதனை முன்னிட்டு அனத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இத்தலத்தின் வரலாற்றின்படி சிவபெருமான் திருநெல்வேலி மன்னர் வசுசேனன் மகள் ராஜராஜேஸ்வரியுடன் இந்த தலத்தில் சதுரங்க போட்டி விளையாடியதும், அதில் சிவபெருமான் வெற்றி பெற்று மன்னனின் மகளை திருமணம் செய்து கொண்டதாகவும் புராண வரலாறு கூறுகிறது.
இதனால் இத்தலத்தில் அம்பிகையின் பெயர் ராஜராஜேஸ்வரி என்று வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் 1500 ஆண்டுகளுக்கு முன்னமே சதுரங்கப் போட்டி குறித்த ஒரு பதிவு தமிழகத்தில் இருக்கிறது. இந்தியாவில் இருந்து தான் இந்த விளையாட்டு ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு சென்று இருக்கிறது. இதில் சில, சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பது உண்மை.
உலக அளவில் சதுரங்கப் போட்டிகளில் கோலோச்சிக் கொண்டிருக்கும் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் தற்போது பள்ளி மாணவர் பிரக்ஞானந்தா தமிழகத்தைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சதுரங்க போட்டிகள் தமிழகத்தில் நடைபெற உள்ள சூழலில் பழமையான இத்திருக்கோயில் குறித்த வரலாறு விளையாட்டுக்கும் தமிழகத்துக்கும் உள்ள பழமையான தொடர்பை மக்கள் அறிந்து கொள்வதற்கும் ஏதுவாக இந்த போட்டிகளை பூவனூர் சதுரங்க வல்லபநாதர் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.